வியாழன், 2 ஏப்ரல், 2009

எதிரி..

முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்...

பகிர்வுகள்..


ரயிலைத்தவற
விட்ட
இரவொன்றில்தான்
எழுதப்பட்டது
உனக்கான
சில பகிர்வுகள்..

பிரிவு..

பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்...

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...

முதன் முதலாய்...

முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது,,
இரைச்சலுடன்..

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்..

ஒருமுறை...

ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை...
நம்பிக்கை...
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப்படுவதே ....

ஒருமுறை
ஊற்றேடுப்பதல்ல
காதல்..
ஒவ்வொரு முறையும்
பிரவகிப்பதே...

ஊசலில்...

இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம் ...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...

வேலியின்றியே..

உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட
எல்லைகள்
வேலியின்றியே திரிகின்றன
இன்னமும்....

பயணியிடமாவது...

காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை
நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப்பற்றி
பேசியபடியிருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...

தாமதம்..

இத்துடன்
நிறுத்திக் கொள்ளலாம்..
என இருவரும்
முடிவெடுத்த பிறகான
நாட்கள்
எப்போதும் போல்
புலர்கின்றன..
என்றாலும்
எனது விடியல்
தாமதமாகிறது...